நானே கடவுள் எனக்கே பூஜை

 
        லகமெல்லாம் போற்றிப் புகழும் ஆதிசங்கர பகவத்பாதரைப் பற்றியும் அவரின் அத்வைத கொள்கைப்பற்றியும் விளக்கம்பெற குருஜியிடம் சில கேள்விகள் கேட்டேன் எங்கள் உரையாடலின் முழுவடிவம் இதா உங்கள் முன்.....
 
     குருஜி:    சாக்ரடீஸ் முதல் அரிஸ்டாட்டில் வரையிலான கிரேக்க அறிஞர்களின் கருத்துக்கள் அறிவைப்பற்றியும் அரசியலை பற்றியும் அதிகமாகப்பேசுவதற்கு மூலகாரணமே ஐரோப்பியர்கள் ஆதிகாலம் முதற்கொண்டே வெளியிலுள்ள பொருட்களால்தான் மனிதன் நிலையான மகிழ்ச்சியை அடையமுடியும் என்று உறுதியான நம்பிக்கையுடையவர்களாக நம்பிவருவதாலே ஆகும். ஆனால் கிழக்கு நாட்டவர்களாகிய நாம் வெளிப் பொருட்களால் மனிதன் இன்பத்தைப்பெற முடியாது துன்பத்தை மட்டுமே வெளிப்பொருட்கள் தரும் என்று கருதுகிறோம். வெளிப்பொருட்களில் சந்தோஷம் இல்லை என்பது மட்டுமல்ல உண்மையில் வெளிப்பொருட்கள் என்று எதுவுமே இல்லை என்று கருதுகிறோம். இதனால்தான் அகப் பொருட்களான ஆத்மா, பிரம்மம் இவற்றைப்பற்றி ஆராய்ந்து அனுபவித்து நிலையான சந்தோஷத்தை சம்பாதித்துக்கொள்ள போராடுகிறோம்
.
   கேள்வி:    வெளிபொருட்கள் என்று எதுவுமே இல்லை என்றால் இந்த உலகத்தில் நாம் காணுகின்ற காட்சிகள் அனைத்தும் பெறுகின்ற அனுபவங்கள் அனைத்தும் பொய்யா? வெறும் கற்பனைதானா? தண்ணீர் குளிர்ச்சியைத்தருகிறது நெருப்பு வெப்பத்தைத் தருகிறது. குளிர்ச்சியும், வெப்பமும் வேண்டுமென்றால் நம் மனதும், உடம்பும் கற்பித்துக் கொள்ளும் காரணமாக இருக்கலாம். ஆனால் நீரும், நெருப்பும் இல்லவே இல்லை அவை வெறும் கற்பனைதான் என்பதை நம்பவே முடியவில்லை. இந்த உலகம் மாயை, பொய்த்தோற்றம் என்று கூறுவதை எப்படி புரிந்துகொள்வது அல்லது ஏற்றுக்கொள்வது?

  குருஜி:    உலகம் மாயை என்பதை உணர்ந்து கொள்வதற்கு முன் மாயா  என்ற வார்த்தையின் அர்த்தத்தை சரியாகப்புரிந்துகொண்டால் மாயா வாதத்தை நன்கு உணர்ந்து கொள்ளலாம். மாய் +ஆ = மாயா என்று ஆனது. மாய் என்றால் மாண்டுபோகுதல் மறைந்து போகுதல் என்று பொருள்கொள்ளலாம். ஆ என்பதை ஆகுதல் என்று சொல்லலாம்.  எல்லாம் அழிந்து மீண்டும் தோன்றுவதை மாயா என்ற வார்த்தை  அழகாக உணர்த்துகிறது. பொதுவாக சாலையில் மதிய வெயிலில் தெரியும் கானல் நீர் மேடைகளில் செய்யப்படும் மாயாஜாலம், செப்பிடுவித்தை, கண்கட்டு வித்தை என்றெல்லாம் சொல்லுகிறோமே அது மாயை. அதாவது இல்லாததை இருப்பது போல் காட்டுவது மாயை ஆகும்.

    இல்லாததை இருப்பதாகக்காட்டுவது மாயை என்றால் ஆதிசங்கரர் சொல்லுவது போல் இந்த உலகம் இல்லாது இருந்து இருப்பது போல் தெரிகிறது என்பது நம் மூளைக்கு புரிந்து கொள்ள சற்று கடினமாகத்தான் இருக்கிறது. நானும், நீயும் மனிதர்கள். இரண்டு பேருமே நிஜமாக இங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம் இதை நமது புலன்களும் அறிவும் நன்கு புரிந்து ஒத்துக்கொள்கிறது. உறுதியாகவும் நம்புகிறது ஆனால் உண்மையில் நாம் இரண்டு பேருமே இல்லை இது வெறும் கற்பனைதான் என்கிறது. ஆதிசங்கரரின் அத்வைத கொள்கை.
 
  சங்கரர் இந்த கடினமான மாயாவாதக் கொள்கையை மிக எளிமையாக விவரித்து நம்மை நம்பச்செய்து விடுகிறார். இரவில் உறங்குகிறோம் தூக்கத்தில் கனவு வருகிறது. அந்த கனவில் நாம் ராஜாவாக இருக்கிறோம். ஏழைகளுக்கெல்லாம் செல்வங்களை வாரி வாரி வழங்குகிறோம். குற்றவாளிகளை நீதி விசாரணை செய்து தண்டிக்கிறோம். புலவர்கள் நம்மைப் போற்றி பாடுகிறார்கள். எதிரி அரசர்கள் நம்மை தலை தாழ்த்தி வணங்கி நிற்கிறார்கள். வீர முரசும், ஜெயகோஷமும் விண்ணதிர முழங்குகிறது.

   கனவு கலைகிறது. நாம் நம் வீட்டு கட்டிலில் படுத்துக்கிடப்பதை உண்ர்கிறோம். கனவு கலைந்த பிறகுதான் இதுவரை நாம் அரசனாக இருந்ததும் ஜெயகோஷங்களை கேட்டதும் வெறும் மாயை என்ற உண்மை புலப்படுகிறது.   இதே போன்றுதான் இந்த உலகமும் இதில் நாம் வாழும் வாழ்க்கையும் கனவு முடிந்த பிறகுதான் உண்மை புலப்படுவதுபோல் வாழ்க்கை முடிந்த பிறகுதான் உண்மை தெரியும். அதை உணரவும் முடியும். கனவு என்பது சில நிமிடநேரம் நீடிக்க கூடியது. வாழ்க்கையும் சில ஆண்டுகள் நீடிக்க கூடியது. நிமிடம் ஆண்டு என்று காலம் முடியும் போதுதான் உலக மாயை என்ற உண்மையை அறிய முடிகிறது.
 
    இப்போது சொல் நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பணம்தானா பல தோற்ற மயக்கங்களா கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ என்று பாரதி பாடியது போல் நாமும் நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ என்று பாடத் தோன்றுகிறதல்லவா?

கேள்வி:    புரிகிறது ஐயா. வயலுக்குச் சென்றால்தான் வாய்க்காலின் அளவு தெரியும் என்பது போல் வாழ்க்கை முடிவுக்கு வந்தால்தான் அது நிஜமானதா? இல்லையா? என்பது தெளிவாகும். எனவே இத்தகைய கருத்தைச்சொன்ன ஆதிசங்கரரைப்பற்றியும் அவர் உலகமே கற்பனையென்று கூறுவதற்கு என்ன காரணம் என்பதைப்பற்றியும் அறிந்து கொள்ள ஆசைபடுகிறேன்?

 குருஜி:    ஆதிசங்கரர் கேரளாவிலுள்ள மலபார் அருகிலிருக்கும் காலடி என்ற ஊரில் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றினார். இதை ஆனந்தகிரி என்ற அறிஞர் மறுக்கிறார் சங்கரர் கி.மு. 12-ல் சிதம்பரத்தில் பிறந்ததாகக் கூறுகிறார். அவர் சிதம்பரத்தில் பிறந்தாரா? காலடியில் பிறந்தாரா? என்பது முக்கியமல்ல. அவர் தாம் வாழ்ந்த 32-வயதிலேயே இமாலய சாதனைகள் புரிந்திருக்கிறார். பௌத்த மதத்தால் இந்து மதம் தாக்கப்பட்டு நிலைகுலைந்து பலப்பல பிரிவுகளாகப் பிரிந்து சிதைந்து கிடந்த காலத்தில் தமது அளப்பறிய அறிவாற்றலாலும், வாதத் திறமையாலும் நமது மதப்பிரிவுகளை ஒருங்கிணைந்து பௌத்தமத ஆதிக்கத்தலிருந்து காப்பாற்றி இருக்கிறார்.

   சங்கரரின் நூல்களைப் படிக்கும் பொழுது அவரின் அறிவாற்றலுக்கு இணையாக உலகிலுள்ள எந்த அறிஞனையும் குறிப்பிடமுடியாது. உலக அறிஞர்கள் அனைவரையும் தராசில் ஒரு பக்கம் வைத்து சங்கரரை மறுபக்கம் வைத்தால் சங்கரர் இருக்கும் தராசு தட்டு பக்கமே முள் சாய்ந்து நிற்கிறது. அன்று முதல் இன்று வரை சங்கரரை மிஞ்சக்கூடிய அறிவாளிகள் உலகத்தில் இல்லையென்றே சொல்லலாம்.

    இதை நானொரு இந்தியன் என்பதற்காகவோ இந்து என்பதற்காகவோ பெருமை அடித்துக்கொள்ள சொல்லவில்லை. உலக ஞானபுருஷர்கள் பலரின் கருத்துக்களை ஓரளவேனும் அறிந்ததினாலும் அவர்களின் கருத்துக்களோடு இவரின் கருத்துக்களை ஒப்பிட்டு பார்த்ததினாலும் சொல்லுகிறேன்.

    அதற்காக சங்கரரின் கொள்கைகள் அனைத்துமே சரியானது என்றோ அனுபவத்திற்கு சாத்தியமானது என்றோ நான் கருதவில்லை. அவரின் கொள்கைகளிலும் சில குறைபாடுகள் இருக்கிறது. ஆனால் அந்த குறைபாடுகள் மற்ற அறிஞர்களின் குறைபாடுகளோடு ஒப்பிடும்போது எண்ணிக்கையிலும், கொள்கை தன்மையிலும் சிறியதாகவே இருக்கிறது.   

    இனி அவர் உலகத்தை ஒரே அடியாக மாயை என்று கூறியதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம். மிக முக்கியமான சில விஷயங்களில் வேதங்களும், உபநிஷதங்களும் முரண்பாடான பல கருத்துக்களைக் கூறுகிறது அல்லது குழப்பமான முடிவுகளை நாம் அடைவதற்கு காரணமாக இருக்கிறது. உதாரணமாக மூலப்பரம் பொருள் ஒன்றா பலவா என்ற கேள்வியைக் கேட்கும்போது ஒன்றுதான் என்ற பதிலும் இல்லை பலவிதம்தான் என்ற பதிலையும் வேதங்களும், உபநிஷதங்களும் தருகிறது.

     அதே நேரம் மூலப்பொருள் சித்து மட்டுமா அல்லது சித்தும், ஜடமுமா என்று கேட்டாலும் இதே மாதிரியான பதில்களைத்தான் அவைகள் தருகின்றன. இந்த உலகம் எதிலிருந்து உருவாக்கப்பட்டது என்பது பற்றியும் ஒரு முடிவான இறுதியான பதிலையும் நம்மால் பெறமுடியவில்லை. மூலப்பொருள் என்று சொல்லப்படுகின்ற பிரம்மத்திற்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்புகள் என்ன என்று கேட்கும் பொழுது பிரம்மம் வேறு உலகம் வேறு என்ற பதிலும் சில இடங்களில் இரண்டுமே ஒன்றுதான் என்ற பதிலும் கிடைக்கிறது.
  
 இத்தகைய முரண்பாடுகளையும், குழப்பங்களையும் நீக்கித் தெளிவான அறிவுப் பூர்வமான பதிலைப்பெற ஆதி சங்கரர் முயற்சித்தார். அந்த முயற்சியின் விளைவே உலகம் மாயை என்ற அவரின் முடிவாகும். மூலப்பொருள் ஒன்றுயென்றோ பலயென்றோ கூறுமிடத்தில் நாம் உண்மை எது என்ற முடிவுக்கு வராமல் இரண்டுமே உண்மைக்கு அப்பாற்பட்டது என்ற முடிவுக்குதான் வரவேண்டும் இதில் எந்த ஒன்றையும் உண்மையென்று எடுத்துகொண்டால் மற்றதை பொய் என்று மறுதலிக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது.
  
   அதாவது பிரம்மம் மட்டும்தான் நிஜம் என்று சொன்னால் இந்த உலகம் பொய்யானது என்பது ஆகும். பிரம்மம்தான் உலகமாகத் தோற்றமளிக்கிறது என்று சொன்னால் உபநிஷதங்கள் இரண்டும் ஒன்றல்ல வேறுவேறு என்று கூறுகின்றன. எந்த ஒரு பொருளுக்கும் எதிர்மறையான இரண்டு இயல்புகள் இருக்கமுடியாது பிரம்மமே உலகமாகவும் உலகத்திலிருந்து வேறாகவும் இருக்கிறது என்பது பொருந்தி வராத கொள்கை என்கிறார் சங்கரர். இதனால்தான் பிரம்மம் தானாகவும், ஒன்றாகவும் இருக்கிறது. வேறாகவும், பலவாகவும் காணப்படுவது எல்லாம் வெறும் மாயத்தோற்றங்களே என்ற முடிவிற்கு அவர் வருகிறார்.
  
   மூலம் பரம்பொருள் ஒன்றுதான் என்று கூறப்பட்டுள்ளதே ஒழிய மூலப் பொருளல்லாதவைகளைப் பற்றி அதன் எண்ணிக்கையைப்பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லையே அதனால் உலகம் மூலப்பொருளாக இல்லாமலிருக்கலாம் ஆனால் மூலப்பொருளில் எந்த கூறுகளில் ஒரு சிறு துளியிருந்து உலகம் உருவாகி இருக்கலாம் அல்லவா என்ற வினா எழுவது இயற்கைதான்.

    ஆனால் மூலப்பொருளின் பிரிவுகளிலிருந்து உலகம் வந்திருக்கலாம் என்ற முடிவிற்கு நாம் வந்தால் வேறு பல சிக்கல் மிகுந்த இடர்ப்பாடுகள் தோன்றுவதற்கு வழிவகை ஏற்பட்டுவிடும். பிரம்மத்தை சித்து பொருள் அதாவது அறிவே வடிவான பொருள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.   ஆனால் உலகம் என்பது ஜடப்பொருள். அறிவிற்கும் தனக்கும் எள்முனை அளவேனும் தொடர்பே இல்லாத பொருளாக இருக்கிறது.

    அறிவு வடிவான ஒன்றிலிருந்து அறிவே இல்லாத வேறொன்று தோன்றுமா என்ற ஒரு சிக்கலும் இவ்வுலகத்திற்கு ஜடப்பொருள்தான் மூலமாக இருந்தது அந்த ஜடமூலத்தை பற்றிக் கொண்டே அறிவுப்பூர்வமான பிரம்மம் ஜடத்தை வைத்து இவ்வுலகை உற்பத்தி செய்ததா என்ற சிக்கலும் எழுகிறது. ஜடத்தை வைத்து பிரம்மம் சிருஷ்டித்தது எனக் கொண்டால் பிரம்மத்திற்கான தனித்தன்மை குறைவு உடையதாக மாறிவிடுகிறது இதனால் பிரம்மம் தானாக இருக்கும் சக்தியில்லாதது என்ற முடிவுக்கு வரவேண்டி இருக்கும்.
   
   எனவேதான் ஆதிசங்கரர் இந்த குழப்பங்களுக்கெல்லாம் முடிவு கட்டவிரும்பி சிருஷ்டி என்பது நிகழ்வதாகத் தோன்றுகிறதே தவிர உண்மையில் எந்த சிருஷ்டியும் நடக்கவில்லை அதாவது பிரம்மம் உலகமாக மாறுவதுபோல் தோற்றமளிக்கிறதே தவிர உண்மையில் பிரம்மத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை என்று அடித்துக் கூறுகிறார். அதாவது மண் பானையாக பொம்மையாக மாறுவது போலிருந்தாலும் அது தனக்குள் எந்த மாற்றமும் இல்லாமல் எப்போதும் போலவே மண் மண்ணாகவே இருக்கிறது என்கிறார்.
 
     சங்கரரின் இந்தக்கொள்கை முடிவை இதற்கு நேர் விரோதமான கொள்கைகளோடு ஒப்பிட்டு பார்த்தால் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். ஆதிசங்கரருக்கு முக்காலத்திலிருந்த அறிஞர்களில் சிலர் பிரம்மமானது உலகமாக மாறுவதுபோல் தோற்றம் மட்டும் அளிக்கவில்லை. உண்மையாகவே உலகமாக மாறுகிறது அதாவது பால் தயிராக மாறுவது போல் பிரம்மம் உலகமாக மாறுகிறது என்ற இந்தக்கொள்கை பிரம்ம பரிணாமக்கொள்கை எனப்படுகிறது.

     இது காரணமாக பிரம்மத்தையும் காரியமாக உலகையும் காட்டுகிறது. இதை எதிர்க்கும் சூன்ய வாதிகள் என்ற ஒரு சாரார் அதாவது பௌத்தர்கள் காரணமும் இல்லை. காரியமும் இல்லை. பிரம்மமும் இல்லை உலகமும் இல்லை வெறும் சூன்யம் மட்டும்தான் இருக்கிறது என்கிறார்கள் ஒரு புறம் காரணமாகிய பிரம்மம் உண்மையானது காரியமாகிய உலகமும் உண்மையானது என்ற பரிணாம வாதமும் இன்னொரு புறம் காரணகாரியம் எல்லாமே பொய் எதுவுமே இல்லை என்ற சூன்ய வாதமும் நமது நாட்டில் வாதப்பிரதிவாதங்களாக நடந்து கொண்டிருந்தபோது காரண காரியம் இரண்டில் காரணம் மட்டுமே நிஜமென்ற சங்கரரின் கொள்கை முழக்கம் முரசொலியாக, சங்கநாதமாக எங்கும் ஒலித்தது.

கேள்வி:    நீங்கள் கூறும் சங்கரரின் கொள்கை புரிவது போலவும் இருக்கிறது புரியாமலும் இருக்கிறது எனவே இதை இன்னும் எளிமைபடுத்திச்சொல்ல முடியுமா?

 குருஜி:    பொதுவாக ஆதிசங்கரரின் அத்வைத கொள்கையாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த வேதாந்த கொள்கையாக இருக்கட்டும். அவைகள் வார்த்தைகளால் விளக்கிக் கூறவோ அல்லது வார்த்தைகளை வைத்தே தெளிவாகப்புரிந்து கொள்ளவோ ஓரளவு இயலாத காரியம்தான். அதற்காக அவைகளை புரிந்து கொள்ளவே முடியாத குழப்பங்கள் என்று சொல்லி விடவும் முடியாது. 

   சங்கரரின் இக்கொள்கையை புரிந்து கொள்ள உணர்வு பூர்வமான ஆன்மீக மனங்களால் முடியாது. நல்லது, கெட்டது எதுவாக இருந்தாலும் சரியானதை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் தைரியம் மிகுந்த அறிவுப்பூர்வமான தத்துவ மனம் வேண்டும். உனக்காக உலகம் மாயை என்ற சங்கரரின் இக்கொள்கையை வேறு வகையில் விளக்கிச் சொல்ல முயற்சிக்கிறேன்.

    ஆரம்பத்திலும், முடிவிலும் இல்லாத ஒன்று இடையில் மட்டும் இருக்க முடியாது என்ற ஒரு நியதி உண்டு. இந்த உலகத்தில் உயிர்களெல்லாம் வினைப் பயனை அனுபவிப்பதற்காகவே படைக்கப்பட்டு இருக்கிறது என்று நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் உயிர்களெல்லாம் தங்களது செயல்களால் ஏற்படும் நன்மை, தீமைகளை அனுபவித்து முடித்த பிறகு உடம்புகளோடு பிறக்க வேண்டிய அவசியம் இல்லை. உடல்கள் உருவாகதபோது உடல்களைத்தாங்கி நிற்கக்கூடிய உலகமும் தேவையில்லை. இன்னும் சுருக்கமாகவும், விளக்கமாகவும் சொல்வதென்றால் சகல உயிர்களும் பாவங்கள் கழுவப்பட்டு இறைவனின் திருவடியை அடைந்த பிறகு உலகம் என்பது தேவையற்ற ஒன்றாகிவிடுகிறது.
 
    ஆதியிலும், அந்தத்திலும் உலகம் என்பது தேவையற்றதாக அல்லது இல்லாமல் போவதாக இருக்கும் போது இடையில் மட்டும் இது இருக்கிறது என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். உலகம் என்பது உண்மைப் பொருளென்றால் அனைத்து உயிர்களும் மோட்ச நிலையை அடைந்த பிறகும அது அழியாததாக இருக்கும். ஏனென்றால் உண்மைப்பொருளுக்கு ஒன்றாக இருந்து வேறொன்றாக மாறும் இயல்பு உண்டே தவிர முற்றிலுமாக அழிந்துபோகும் தன்மை கிடையவே கிடையாது.

   உயிர்களுக்காகத்தான் உலகம் எனும்போது உயிர்களே இல்லாது உலகம் இருப்பதை நிரூபிக்கவோ உணர்த்தவோ முடியாது எனவேதான் சங்கரர் உலகம் என்பதே இல்லையென்று வாதிடுகிறார். பிரம்மத்தின் வசமாக இருந்து உயிர்கள் வெளிப்பட்டு மீண்டும்ú பிரம்மத்திலேயே அவைகள் ஐக்கியம் அடைந்துவிடுவதினால் உயிரும், உலகமும், பிரம்மமே தவிர வேறு ஒன்றும் அல்ல. ஜீவன்களின் ஆத்மா லயப்படாத நிலையில் உலகம் உண்மையாகத் தெரிகிறது. ஆத்மாவின் இயல்பை அது அறிந்து கொள்ளும்போது அதாவது முக்தி நிலையை அது பெறும்போது உலகமும் இல்லை. உயிர்களும் இல்லை எல்லாமே வெறும் மாயைதான்.

 கேள்வி:   நீங்கள் குறிப்பிடும் சங்கரரின் இந்தக் கருத்தை அறிவு ஏற்றுக்கொள்கிறது.  ஆனால் அனுபவம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.  கருங்கல்லும் பிரம்மாதான் மாங்கனியும் பிரம்மாதான் என்று வாதிடும்போது கருங்கல்லின் மூலப்பொருளும், மாங்கனியின் மூலப்பொருளும் ஏறக்குறைய ஒன்றுதான் என்பது விஞ்ஞான வாதமாக இருக்கிறது என்றாலும் இரண்டின் தன்மையும் வேறுபடுகிறதே என்று உணர்வு தடுமாறுகிறது.  மாங்கனி பசி தீர்க்கும்  கருங்கல் தீர்க்குமா? எனவே இந்த உலகம் மாயை என்று சங்கரர் சொல்வதை நீங்கள் ஒத்துக்கொள்கிறிர்களா?

குருஜி:  நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். சங்கரரின் அத்வைதக் கொள்கையில் பல ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் சில வற்றை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இது அந்தக்கொள்கையின் குற்றமா அல்லது நமது புரிந்து கொள்ளுதலின் குற்றமா என்று அறுதியிட்டு கூற முடியவில்லை.  இருந்தாலும் இக்கொள்கையிலுள்ள சில முரண்பாடுகளை வெளிப்படையாகக்கூறிவிடுதல்  நல்லது என்று நினைக்கிறேன். இதற்குக்காரணம் வருங்காலத்தில் வரும் அத்வைத நிபுணர்கள் இந்த முரண்பாடுகளுக்கு சரியான விளக்கங்களை தந்து சங்கரரின் அறிவு கிரீடத்தில் இன்னும் சில வைரங்களைப் பதிப்பார்கள் என்ற ஆசையில்தான்.
   
    உலகம் என்பதை மாயை என்று நிரூபிப்பதற்கு சங்கரர் அடிக்கடி ஒரு உதாரணத்தைக் கையாளுவார்.  அது கயிறு பாம்பாகத்தெரிவதுபோல் பிரம்மம் உலகமாகத் தெரிகிறது என்பதாகும். இந்த உவமையில் கயிறு, பாம்பு என்ற இரண்டு பொருட்கள் மட்டுமல்லாது அதைக் காண்பவன் என்ற மூன்றாவது பொருளும் இருக்கிறது.  கயிறு பாம்பாக மனிதனுக்குத் தெரிகிறது. ஆனால் பிரம்மம் யாருக்காக உலகமாகத் தெரிகிறது. அதாவது அத்வைத சித்தாந்தத்தின் படி உலகிலுள்ள எல்லாப் பொருளுமே பிரம்மம் தான் பிரம்மத்திற்கு அந்நியமாக எதுவுமே கிடையது

   அப்படி இருக்கும் பொழுது மனிதனும் பிரம்மம்தானே. பிரம்மம் பிரம்மத்தையே ஏமாற்றிக்கொள்ள உலகமாக வெளிப்படுகிறது என்றுதானே நாம் எடுத்துக்கொள்ள முடியும்.  தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் அவசியம் பிரம்மத்திற்கு எதற்காக ஏற்படவேண்டும். அதாவது இன்னொரு கோணத்திலும் இதைக் சொல்லலாம்  கயிறு பாம்பாகத்தோன்றும்  சங்கரரின் உவமையில் கயிற்றைப்போலவே பாம்பும் ஒரு உள்பொருள்தான்.  அந்த நேரம் அதாவது கயிற்றை பாம்பாக நாம் தவறுதலாகக் கருதும் அந்த நேரம் பாம்பு அங்கு இல்லாத பொருளாக இருக்கலாம்.  ஆனால் உண்மையில் பாம்பு என்பது இல்லாத பொருளே அல்ல.  பாம்பு உள்ள பொருளாகவும் நாம் முன்பே அறிந்த பொருளாகவும் இருப்பதினால்தான் கயிற்றைக் கண்டதும் பாம்பாகக்கருத வேண்டிய நிலை வருகிறது. எனவே உலகம் தோன்ற வேண்டுமென்றால் அதுவும் பாம்பைப்போன்றே ஒரு உள்பொருளாகத்தான் இருக்க வேண்டும். அதனால் இல்லாத பொருள் இருப்பதாகத் தெரிவதற்கும் அனைத்தும் பிரம்மத்தின் மறுதோற்றம் என்பதற்கும் அத்வைத சித்தாந்தம் முழுமையான ஆதாரங்களைத்தரவில்லை.

 கேள்வி:    நீங்கள் குறிப்பிடுவதுபோல் அத்வைத சித்தாந்தத்தை நிறைவு செய்ய வருங்காலத்தில் ஞானியர் பரம்பரை வரும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.  பிரம்மம் உலகம் போல் தோன்றுவதுபோலவே உயிர்களும் பிரம்மத்தின் அம்சம்தானா? உயிர்களின் நிலைபற்றி சங்கராச்சாரியார் என்ன சொல்கிறார்?

 குருஜி:   இது வரை உயிர்களுக்கு சங்கராச்சாரியரைபோல் யாரும் விளக்கம் கொடுக்கவில்லை. உயிர் பற்றிய அவரின் கருத்து மிகவும் உன்னதமானது. சங்கரருக்கு முன்பிறந்த பல உலக ஞானிகள் உயிரைப்பற்றி இவ்வளவு துல்லியமான கருத்துக்களைச் சொன்னார்கள் என்றோ அல்லது அவர்களே அறிந்திருந்தார்கள் என்றோ கூறமுடியாது.  இதில் வேதகால ரிஷிகளையும் உபநிஷத பிரம்மவாதிகளையும் நான் சேர்க்கவில்லை என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும்.

   உலகத்தைக் கயிறு பாம்பாக தெரிவது போன்று மாயப்பொருள், மயக்கப்பொருள் என்று வர்ணனை செய்த சங்கரர் உயிரைப்பற்றி அப்படிக்கருதவில்லை. பிரம்மத்தை பரமாத்மா என்று சொல்லும் அவர் உயிர்களை ஜீவாத்மா என்று அழைக்கிறார் பரமாத்மாவிற்கும், ஜீவாத்மாவிற்கும்  என்ன வித்தியாசம் என்றால் பரமாத்மா என்றும் எங்கும் கட்டுப்பாடில்லாத சுதந்திரத்தன்மை உடையது ஆகும்.  ஜீவாத்மா அப்படி அல்ல அது கட்டுண்ட நிலையிலேயே அதாவது சுதந்திரமற்ற நிலையிலேயே இருக்கிறது என்கிறார்.  தனது கட்டுக்களை உடைத்து பரமாத்மாவோடு இணைவது அல்லது தான் தன் நிலையை உணர்வது ஜீவாத்மாவின் வேலையென்றும் சொல்லுகிறார். அதாவது பரமாத்மாதான் ஜீவாத்மாவாக மாறி இருக்கிறது ஆனால் தனது மாற்றத்தை அல்லது உண்மைத்தன்மையை அது அறியாமல் இருக்கிறது என்கிறார்.  இதை மிக அழகிய உதாரணத்தோடு சங்கரர் விளக்குகிறார்.  
 
  அழகான வெண்மையான மலர் ஒன்று இருக்கிறது. அந்த வெள்ளை மலரை சிவப்பு நிற கண்ணாடி வழியாக பார்க்கும்பொழுது அது சிவப்பு மலராகத்தெரிகிறது.  கண்ணாடியை எடுத்து விட்டால் மலரின் நிஜமான நிறம் தெரிந்துவிடும்.  சிவப்பு நிற கண்ணாடி போன்று உலகப்பற்றுக்கள் வெள்ளை மலரான ஜீவாத்மாக்களை மூடியிருக்கிறது.  கூட்டை உடைத்து பட்டாம் பூச்சி வெளிவருவதுபோல் பற்றுகளை உடைத்து ஜீவாத்மா வெளிவந்தால் தானே பரமாத்மாவின் அம்சம் என்பதை உணர்ந்து முக்தி நிலைக்குச்சென்றுவிடும்.

  இங்கு இன்னொரு விஷயத்தையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.  கயிறு, பாம்பு உதாரணத்தில் அதாவது உலகம் பிரம்மம் பற்றிய விஷயத்தில் பாம்பு என்ற அதாவது உலகம் என்ற ஒன்றே இல்லாதுபோய்விடுகிறது என்று சொல்லும் சங்கரர் உயிர் பற்றிய விஷயத்தில் அது இல்லாது போகவில்லை தன்மையில் மாறுபடுகிறது என்று கூறுவதைக்கவனிக்க வேண்டும்.

   அதாவது முதல் உதாரணத்தில் பொருள் என்பதே இல்லை என்பதற்கும் இரண்டாவது உதாரணத்தில் பொருளின் இயல்புதான் மாறுகிறது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை கவனிக்க வேண்டும்.  ஜடப்பொருட்கள் கனவுபோல் கலைந்துவிடுகிறது.  ஜீவப் பொருள் அப்படி கலையாமல் நிலைத்து நிற்கிறது என்று சங்கரர் சொல்கிறார்.

  இவரின் இக்கொள்கை மிகவும் பாராட்டுக்குரியது. மனிதன் என்பவன் மற்ற மதங்களில் குறிப்பிடப்படுவதைபோலப்பாவம் நிறைந்தவன் என்றோ சக்தியற்றவன் என்றோ நமது மதம் கருதவில்லை பாவங்களைச்செய்வது மனிதனின் இயல்பாக இருந்தால்கூட அவன் அதிலிருந்து விடுபடும்பொழுது இறைவனுக்கு இணையானவனாக மாறிவிடுகிறான். அதாவது தகப்பனைப் போல் பிள்ளை இல்லாவிட்டாலும் தகப்பனும், பிள்ளையும் ஒன்றுதான் என்று சொல்லும் பொழுது வாடி வதங்கிக்கிடக்கும் மனித மனங்கள் துளிர்விட்டு எழுந்து பசுமையுடன் தனது சுய தர்மத்தை கடைப்பிடிக்கும் அல்லவா. 




 கேள்வி:   மனிதனும் தெய்வமாகலாம்! என்ற கருத்திலிருந்து மாறி மனிதனே தெய்வம்தான் அதை அவன் புரிந்து கொள்ளவில்லை.  புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும் என்ற அத்வைத சித்தாந்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அத்வைதிகள் பிரம்மத்தை பற்றி அதாவது கடவுளைப்பற்றி அது அழியாதது, நிலையானது என்று சொல்வதை நீங்கள் முன்பு கூறியவற்றிலிருந்து ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது.  இருப்பினும் மாயை என்ற வார்த்தையை எந்தந்த வகையில் சங்கரர் பயன்படுத்துகிறார் ஏற்றுக்கொள்கிறார் என்பதை இன்னும் சற்றுத்தெளிவாகச் சொன்னால் புரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும்.   எனவே அத்வைத மாயை என்பது என்ன? என்று கூறவும்.
 குருஜி:  சங்கரர் மாயை என்ற சொல்லை ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை. பல அர்த்தங்களிலும் அதைப்பயன்படுத்துகிறார். மாறிக்கொண்டே இருக்கும். இந்த உலகம் மாறாத ஒன்றிலிருந்து தோன்றுகிறது நிலையில்லாத இந்த உலகம் நிலையான ஒன்றிலிருந்தே வந்தது.  சதா சர்வ காலமும் இயங்கிக்கொண்டே இருக்கும் இந்த உலகம் இயக்கமே இல்லாத ஒரு மூலப்பொருளிலிருந்து வந்தது.  மாறுதலடையாத நிலையான இயங்காத அந்த ஒன்றே பிரம்மம் அல்லது கடவுள் என்று அறியப்படுகிறது.

    இப்படி முற்றிலும் வேறான பிரம்மத்திலிருந்து உலகம் எப்படித் தோன்றியிருக்க முடியும் என்ற சந்தேக வினா  நமக்கு எழுவதும் இயற்கைதான்  ஒன்றிலிருந்து இன்னொன்று தோன்றுகிறது என்பதை எத்தனையோ உதாரணங்களின் மூலம் சொல்லலாம் மரத்திலிருந்து கிளை தோன்றுகிறது கடலிலிருந்து நுரை தோன்றுகிறது மண்ணிலிருந்து பானை தோன்றுகிறது என்றெல்லாம் நிறைய உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்

    ஆனால் இவற்றில் எதிலிருந்து எது தோன்றுவது போல பிரம்மத்திலிருந்து உலகம் தோன்றுகிறது என்ற வினாவும் எழும். ஆனால் இதற்கு அத்வைதம் இவற்றில் எதுமாதிரியும் உலகம் தோன்றவில்லை என்ற பதிலைத்தருகிறது அதாவது மரத்திலிருந்து கிளை தோன்றினால் மரத்தில் பல மாற்றங்கள் நடக்கிறது மண்ணிலிருந்து பானை தோன்றினால் மண்ணும் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது ஆனால் பிரம்மத்திலிருந்து உலகம் தோன்றுவதினால் பிரம்மத்தில் எந்த மாற்றமுமே நிகழ்வதில்லை.

    இது ஒரு விந்தையான நிகழ்ச்சியாகும்.  மனிதர்களின் சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டாத விஷயமும் ஆகும்.  அதனால்தான் இந்த விந்தை நிகழ்வை சங்கரர் மாயை என்ற செல்லால் அழைக்கிறார். சங்கரரிடமிருந்து இம்மாயாவாதக் கொள்கையை பிராட்லி, கிரீன், ஷில்லர் போன்ற மேலைநாட்டு தத்துவ அறிஞர்களும் கடனாகப் பெற்று எல்லையில்லாத ஒரு மூலப்பொருளிலிருந்தே எல்லைக்குட்பட்ட இந்த உலகமும் உயிர்களும் தோன்றுகிறது என்று சொல்கிறார்கள்.
  
   மாயை  என்ற வார்த்தைக்கு சங்கரர் வேறு ஒரு விளக்கமும் தருகிறார். உருவமே இல்லாத ஒன்றை உருவமாகக் காட்டுவதுதான் மாயை. இந்த மாயை பிரம்மத்திலிருந்து வெளிப்படுவதால் இது பிரம்மத்தோடு சேர்ந்ததா? சேராததா? என்ற வினா எழும்.  ஆனால் இதற்குச் சுலபமாக விடையைக்கண்டுவிட முடியாது.  மாயையானது பிரம்மத்திலிருந்தே வருவதால் அதை அதற்கு புறம்பானது என்று கூறிவிட முடியாது. அதே நேரம் பிரம்மத்திற்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறிவிடவும் முடியாது.
 
   பிரம்மம் பூரணமாக அதாவது தன் நிலையிலிருந்து எந்த மாறுபாடும் இல்லாமல் பிரம்மமாகவே இருக்கும்பொழுது மாயை என்பதற்கு அங்கு இடம் இல்லை. அதே நேரம் பிரம்மமானது தனது நிலையிலிருந்து உலகமாக மாற எத்தனிக்கும் போது அங்கு மாயை வந்துவிடுகிறது இதனடிப்படையில் பார்த்தால் அத்வைதம் பிரம்மத்திற்கு இரண்டு நிலைகளை கூறுகிறது எனலாம். அதாவது  மாயை  இல்லாத பிரம்மத்தை நிர்குணம் என்றும் அதாவது உருவம்  இல்லாதது என்றும் மாயையோடு வெளிப்படும் பிரம்மத்தை சகுனம் என்றும் அதாவது உருவம் உடையது என்றும் கூறுவதாகக்கொள்ளலாம்.

    உருவம் உடையது எனும்போது அத்வைத கருத்துப்படி உருவம் உடையதாக தோன்றுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். எனவே பிரம்மம் நிர்குணமாக நிற்கும் போது பிரம்மமாகவே இருக்கிறது என்றும் சகுணமாக மாயை வசப்படும்போது ஈஸ்வரனாக பரிணமிக்கிறது என்றும் அல்லது பரிணமிப்பதுபோல் தோன்றுகிறது என்றும் சொல்லலாம்.  அதாவது உருவம் உடைய பிரம்மாதான் ஈஸ்வரன் என்று அத்வைதம் சொல்லுவதினால் பிரம்மத்தின் இரண்டாவது நிலையே ஈஸ்வரன் அல்லது கடவுள் என்று கருதவேண்டிய நிலை வருகிறது. இதை இன்னொரு கோணத்தில் சொல்லுவதாக இருந்தால் குறைவுடைய பிரம்மமே கடவுள் என்பதாகவும் சொல்லலாம்.

   கேள்வி:   இது வரை கடவுள்தான் பிரம்மம் பிரம்மம்தான் கடவுள் என்று கருதிவந்தேன். இப்போது சங்கரர் கூறுவதை வைத்துப் பார்க்கும் பொழுது இரண்டும் வேறுவேறானது என்பதை கிரஹித்துக்கொள்ள அதிர்ச்சியாக இருக்கிறது இது ஒரு புறம் இருந்தாலும் இரண்டாம் நிலையிலுள்ள அல்லது கீழ்நிலையிலுள்ள கடவுளை வணங்குவதும் வழிபடுவதும் தவறான செயல் அல்லவா இதைத் தத்துவம் அறியாத அப்பாவிப் பொதுமக்கள் செய்தால் தவறில்லை ஆதி சங்கரரின் அத்வைத கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகக் கூறுகின்றவர்கள். செய்வது எந்த வகையில் பொருத்தம் உடையதாக இருக்கும்?  

 குருஜி: அதாவது உலகமே பிரம்மத்தின் மாயத்தோற்றம் என்று நம்பும் அத்வைதிகள் தான்வேறு பிரம்மம் வேறு அல்ல என்று பேசும் அத்வைதிகள் எப்படி இறைவனை வெளிப் பொருளாக அதாவது தனக்குள் இல்லாமல் வெளியே இருப்பதாகக்கருதி பூஜை செய்கிறார்கள் என்றுதானே கேட்கவருகிறாய்?   இதற்கு கசப்பாக இருந்தாலும் உண்மையைக் கூறவேண்டியது கடமையாகிறது.  எல்லாம் ஒன்றே என்று கூறுவது அத்வைதம் எல்லாம் ஒன்று அல்ல பல ஆத்மாக்கள் உண்டு இறைவன் என்ற பரமாத்மாவும் தனியே உண்டு என்று கூறுவது துவைதம்.  வேதங்களின் துவக்கப்பகுதிகளான கர்மகாண்டத்தை அனுஷ்டித்து பூஜைகளும் வேள்விகளும் செய்வது துவைத மரபாகும்.

    உபநிஷதங்களின் பிரம்ம வாதத்தை முன்னிறுத்திய தத்துவமே அத்வைதம் ஆகும்.  ஆதிசங்கரர் நமது சனாதான தர்மத்தில்  முறையான தத்துவங்கள் வகைப்படுத்தப்படாமல் கிடந்த காலத்தில் தோன்றியவர் ஆவார்.  இவரின் இந்தக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட வேதியர்கள் பலர் தங்களது பூஜை புனஸ்காரம் என்ற துவைத கொள்கைகளையும் கைவிடமுடியாமல் தவித்தனர்.  ஏனென்றால் வேதியர்களின் சடங்கு சம்பிராதய கொள்கைகள் ஆன்மீக தேவைகளை மட்டும் அடிப்படையாகக்கொண்டது அல்ல. பொருளியல் தேவையையும் அடிப்படையாகக் கொண்டதே ஆகும்.

   அதனால்தான் வேதத்தின் கர்மகாண்ட கருத்துப்படி சடங்குகள் செய்யும்போது துவைதிகளாகவும் தத்துவம் பேசும்போது அத்வைதிகளாகவும் வேதியர்களில் பலர் இருக்கிறார்கள்.  ஆனால் உண்மையில் ஆதிசங்கரரின் அத்வைத கொள்கை சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் பொருட்படுத்துவது கிடையாது.  ஆத்மா தன் இயல்பை அறிந்து கொள்ள எடுக்கும் முயற்சிகளே ஆன்மீக வழியாகும் என்பதை அத்வைதம் வலியுறுத்துகிறது.  அதை இன்றைய அத்வைதிகள் மறந்துவிட்டது காலத்தின் கொடுமையாகும்.

    மேலும் மாயை வசமான பிரம்மமே ஈஸ்வரனாக வடிவெடுக்கிறது என்பதை அதாவது பிரம்மத்திலும் கீழானது ஈஸ்வரன் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது.  பிரம்மம் உலகாக மாறும் நிகழ்வை அதாவது நிகழ்வை மட்டுமே மாயை அல்லது மாயை வசமாகுதல் என்று சொல்லலாமே தவிர இதனால் பிரம்மம் குறைவு அடைந்து விடுகிறது என்பதைத் தக்க ஆதாரங்களோடு நம்மால் மறுக்க முடியும். இதை இன்னொரு சமயத்தில் உனக்கு விரிவாகச் சொல்லுகிறேன்.
 
  சங்கரரின் தத்துவங்கள் உயர்ந்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை ஆனால் அது பக்குவம் அடையாத மக்களிடத்தில் கடை பிடிக்கச் சொல்லி வற்புறுத்தினால் விபரீதமே விளையும். எப்படியென்றால் மனிதனும் தெய்வத்தின் அம்சமே என்ற கருத்தை ஆழமாகக் கருதாமல் மேலோட்டமாகக் கருதினால் நானே கடவுள் எனக்கே வழிபாடு என்ற நிலை வந்துவிடும். இந்நிலை சாதாரண மக்களுக்கு தீவிரமாக ஏற்பட்டால் அது மனவியாதியில் தான் சென்று முடியும்.

   ஆன்மீகப்பாதையானது பைத்தியக்கார வழியாகிவிடும். ஒன்றாம் வகுப்பு முடித்த பிறகு இரண்டாம் வகுப்பிற்குச் செல்வதுதான் முறையானது ஆகும்.  அதே போன்று கடவுளை வெளிப்பொருளாக அதாவது நமக்கு வெளியே இருக்கும் அளப்பறிய சக்தியாக கருதி துவைதிகள் வழிபடும் பாலபாட முறையை முற்றிலும் அறிந்து கடவுளின் அருகில் நெருங்கி நெருங்கி மிகவும் நெருங்கிச்செல்லும் பொழுதுதான் நாமும் அவனும் ஒன்றெனக் கருதும் ஞானநிலை வரும். 

    அது வரையில் அதாவது மனது ஒரு நிலைப்பாட்டோடு  பூஜைகள் செய்யும் பக்குவநிலை வரும்வரையில் அத்வைத சித்தாந்தத்தை பல விஷயங்களில் ஒன்றாக வைத்துக் கொள்ளலாமே தவிர அதுவே மூலமும் முடிவும் ஆனது என்ற நிலையை கொள்ளாமல் இருப்பது பல வகையிலும் சரியானதாக இருக்கும். அதாவது பக்தி என்ற பழம் கனிந்தபின் முக்தி என்ற விதையை எடுக்கலாம்.
 கேள்வி:   அழகானதும், ஆழமானதுமான அத்வைத கொள்கையை உருவாக்கும் எண்ணம் சங்கரருக்கு எப்படி வந்தது அதாவது அந்த கருத்து மூலத்தை அவர் யாரிடமிருந்து பெற்றார்? அவர் குரு யார்?

குருஜி:   ஆதிசங்கரரின் நேரடி குரு கோவிந்தபாதர் என்பவர் ஆவார். ஆனால் சங்கரர் கோவிந்தரிடமிருந்து அத்வைத மூலக்கருத்தைப் பெறவில்லை.  தனது குருவிற்கும் குருவான கௌடபாதர்  என்பவரிடமிருந்தே அத்வைதத்திற்கான விதைகளைப்பெற்றார் என்று சொல்ல வேண்டும்.  உபநிஷதங்கள், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் ஆகிய மூன்றும் வேதாந்தமான அத்வைதக் கருத்துக்கு முறையான மூவகை அடிப்படைகள் என்று சொல்லலாம்.  இதில் பிரம்ம சூத்திரமே அத்வைத கருத்தை அதிகம் வலியுறுத்தும் நூலாகும்.  பிரம்ம சூத்திரத்தை உத்ர மீமாம்சை என்று சொல்வார்கள்.  இது வேதத்திலுள்ள கிரியை பகுதிகளை விளக்கும் பூர்வ மீமாம்சையிலிருந்து பிரிந்து வந்ததாகும்.  மீமாம்சை என்றால் முறையான ஆய்வு என்றும் சொல்லலாம்.  அதாவது பிரம்ம சூத்திரத்தை முறையான தெளிவான புரியும் படியுமான ஆய்வுக்கு உட்படுத்தியது உத்ர மீமாம்சையாகும்.

    பிரம்ம சூத்திரம் நான்கு அதிகாரங்களைக் கொண்ட ஒரு நூல்.  ஒவ்வொரு அதிகாரமும் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு கருத்துச் செறிவு மிக்க பல சிந்தனைகள் அதில் விளக்கப்பட்டுள்ளது.  அப்படி விளக்கப்பட்டுள்ள கொள்கைகளில் சிற்சில மாறுபாடுடைய அத்வைதம், விஸிஷ்டாத்வைதம், துவைதம், பேதாபேதம், சுத்தாத்வைதம் ஆகிய தத்துவப் பிரிவுகள் அடங்கியுள்ளன.  இவற்றை முறையே சங்கரர், ராமானுஜர், மத்வர், நிம்பார்க்கர், வல்லபர் ஆகிய ஆச்சார்ய புருஷர்கள் உருவாக்கியுள்ளனர்.  இவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்து சிந்தனை களஞ்சியங்களும் பிரம்ம சூத்திரத்தையே ஆதாரமாகக் கொண்டு எழுந்தவைகள் ஆகும்.
 
    பிரம்ம சூத்திரத்திலுள்ள ஒருமைக் கொள்கையான அத்வைதத்திற்கு மாண்டூக்ய உபநிஷதம் கருத்து வழியில் பெரும் உபகாரமாக அமைகிறது.  ஆதிசங்கரரின் பரம குருவான கௌடபாதர் மாண்டூக்ய உபநிஷதத்திற்கு மிக அழகிய உரை ஒன்று எழுதியுள்ளார்.  இந்த உரையே சங்கரரின் கொள்கைகள் அனைத்திற்கும் மூல வித்தாக இருக்கிறது.  மேலும் கௌடபாதரின் மாண்டூக்ய உபநிஷத காரிகை என்ற இந்த நூலே ஒருமைக் கொள்கையான அத்வைததத்தின் பிரம்ம ஆத்ம ஒருமை, உலக தோற்றக் கொள்கை, பரம்பொருளை தத்துவ நெறிகளால் விளக்க இயலாமை,  மோட்சம் அல்லது விடுதலைக்குரிய நேர்வழி, ஞானம் ஆகியவைகளை விளக்குகிறது.   

   கௌடபாதரது  காரிகை நூல் மாறுபட்டுநிற்கும் அளவை நெறியை மேற்கொள்ளும் மாக்ய மிகரர் கருத்தினையையும் உடன்பாட்டு நெறியை போதிக்கும் உபநிஷத கருத்தையும்  இணைத்து விளக்கம் தருகிறது.  இந்த  காரிகை நூல் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.  முதல் பகுதி ஆகமம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.  இந்த ஆகமம் பகுதி மாண்டூக்ய உபநிஷத்தின் மூலக் கருத்தை விளக்குகிறது.  இதில் கௌடபாதர் தான் உள்பொருளை அறிந்து கொண்ட விதம் பற்றியும் அது அறிவினால் புரிந்து கொள்ளும் விதத்தை பற்றியும் மிகத் தெளிவாக விவரிக்கிறார்.

 இரண்டாம் பகுதியான வைதாத்யம் என்ற பகுதி பல வழக்குறைகளால் உலகத்தோற்றம் உடையது  என்பதையும் இருமை மாறுபாடு ஆகியவற்றை உடையது  என்பதையும் விளக்குகிறது.  மூன்றாம் பகுதி அத்வைதத்தின் உறுதிபாட்டை தெளிவுறுத்துவதோடுல்லாமல் ஆலாத சாந்தி என்ற நான்காம் பகுதி அத்வைத கொள்கையை நாலாபுறத்திலிருந்தும் அலசி ஆராய்ந்து கொள்கைகளுக்கு ஏற்ற சரியான முடிவுகளை எடுக்க வழிவகை செய்கிறது.
 
   கௌடபாதருடைய காலத்தில் புத்தமத தத்துவங்கள் அரசர்களின் ஆசி பெற்று இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.  அந்த தாக்கத்தை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலையும் கட்டுப்படுத்த வேண்டிய தவிர்க்க முடியாத நிலையும் அவருக்கு இருந்தது.  ஆனால் அதை அவரால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.  ஆதிசங்கரரே அப்பணியை நிறைவு செய்தார் எனலாம்.


ஆதிசங்கரரின் அத்வைத ஆராய்ச்சியை வைணவம், சைவம், சாக்தம் ஆகிய மதப்பிரிவுகளுக்கு தத்துவ தாகத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.  உபநிஷத காலத்தோடு முடிந்துபோன அறிவார்த்த வாதமுறைகள் ஆதிசங்கரர் காலத்திலேயே மீண்டும் புது எழுச்சியோடு எழுந்தது எனலாம்.  இன்று வரை இந்து மதத்தின் தத்துவங்கள் நிலைத்து நிற்பதற்கும் மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்து கலந்து இருப்பதற்கும் ஆதிசங்கரரே ஆதாரம் என்று சொல்லலாம்.  காலடி என்ற ஒரு தொலை தூர கிராமத்தில் சங்கரர் அவதரித்து இருந்தாலும் காலடியில் பெய்த கனகதாரா உலகம் முழுவதும் தூரதூரங்களைக் கடந்து இன்றும் முழுஒளியோடும், வேகத்தோடும் பரவி வருவதற்கு ஏன் ஐரோப்பியர்கள் கூட நமது மதத்தின் அறிவுப் பூர்வமான கருத்துக்களைப் பார்த்து வியந்து போய் நிற்பதற்கும்  சங்கரரே காரணமாகும்.   


4 comments:

கண்ணன் said...

நம்ம ஊரில் உள்ளவன் வெள்ளைக்காரன் தான் புத்திசாலி மேதாவி என்று குதிக்கிறாங்க இந்தக் பதிவை படித்த பிறகு எல்லாவற்றுக்கும் அண்ணன் நம்மவூர்காரன் என்பது புரியுது ஆதிசங்கர் மாதிரி நல்ல மேதாவி பிறந்த நாட்டில் நாமும் பிறந்தது பெரிய புண்ணியம்

Anonymous said...

பதிவு அருமை ஐயா.ஆனால் இதுபோன்ற இடுகைகளை புரிந்துகொள்ளும் நிலையில் நம் மக்கள் இருந்தால் கவலையே இல்லையே.தங்கள் பதிவுகளை மேலும் சற்று எளிமைப்படுத்தி பதிப்பித்தால் நலமாக இருக்கும் என்பது அடியேனின் கருத்து

ராவணன் said...

அய்யா நீங்கள் சங்கரர் விசயத்தில்,எப்போது பிறந்தார் என்று உண்மையாக எழுதியுள்ளீர்.ஆனால் காஞ்சி சங்கரமடத்தில் அவரை கி.மு.500 ஆம் ஆண்டில் பிறந்ததாகக் கூறுகின்றனர்.அவர்களது பஞ்சாக்கத்தில் அதிலிருந்து சங்கராச்சியார் என்று ஒரு கணக்கு வரும்.இதேதான் வைணவர்கள் ஆண்டாளுக்கும் செய்கிறார்கள்.
அவர்கள் பிறந்தார்கள்..வாழ்ந்தார்கள்..எதையோ சாதித்தார்கள்..அதை ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்தான் செய்தார்கள் என்று கதைவிடவேண்டும்.
நான் எதையும் குற்றம்சொல்ல வருவதில்லை...சூடான ரத்தம்...சில நேரங்களில் சூடான வார்த்தைகள் வந்துவிடும்.

Guruji said...

@ராவணன்


அன்பு சகோதரர் ராவணணுக்கு நீங்கள் நலம்பெற நான் நம்பும் கடவுளும் நீங்கள் நம்பும் இயற்கையும் துணை செய்யட்டும் சங்கரமடத்தின் பஞ்சாங்கம் ஆதிசங்கரரின் பிறப்பைப்பற்றி எதற்காக அப்படி தவறான தகவலை தருகிறது என்று எனக்கு உண்மையாக தெரியாது அல்லது அதை நான் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் சொல்லலாம் உங்களுக்காக முடிந்தவரை ஆராய்ந்து பதில் சொல்கிறேன் அன்புடன் காத்திருக்கவும் இளம் வயதில் வேகமும் துடிதுடிப்பும் இருப்பது இயற்கையான விஷயம்தான் அதை தடைசெய்யவேண்டிய அவசியம் இல்லை காலம் செல்லச் செல்ல அனுபவம் அறிவை செழுமைப்படுத்தி நிதானத்திற்கு கொண்டுவந்து விடும் என்பதுதான் இயற்கை நியதி நம் தளத்தை தொடர்ந்து பார்த்து கருத்துக்களை சொல்லுங்கள் நன்றி

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்